கொடைக்கானல் அருவி
கொடைக்கானல் அருவி

கொடைக்கானல் என்னும் சொல், காட்டின் முடிவு, கொடிகளின் காடு, கோடை கால
காடு, காட்டின் அன்பளிப்பு என பல பொருள் தரும். இயற்கை இன்னும் இயற்கையாகவே
இருக்கும் இடம் கொடைக்கானல். மரங்களுக்கு அடைக்கலம் தரும் மலைகள்; இதுவரை
பார்த்திராத பறவைகள்; என ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு அனுபவம் தரும் இடம்.
மேற்குத் தொடர்ச்சி மலையில், கடல்மட்டத்திலிருந்து 22 சதுர கிலோமீட்டர்
பரப்பளவில் 2133 மீட்டர் (6998அடி) உயரத்தில் உள்ளது கொடைக்கானல். மலைகளின்
இளவரசி என்றும் இதனை அழைப்பவர்கள் உண்டு.
சுற்றிப் பார்க்க வேண்டிய இடங்கள் :
** பிரையண்ட் பார்க்
** தொலைநோக்கிக் காப்பகம் மற்றும் கோக்கர்ஸ் வாக்
** தூண் பாறைகள்
** குணா குகைகள்
** தொப்பித் தூக்கிப் பாறைகள்
** மதி கெட்டான் சோலை
** பேரிஜம் ஏரி (24 ஹெக்டேர் பரப்புள்ள பெரிய அழகான ஏரி)
** குறிஞ்சி ஆண்டவர் கோயில்
** செட்டியார் பூங்கா
** படகுத் துறை
** சில்வர் நீர்வீழ்ச்சி
கொடைக்கானல் ஏரி
ஏரியில்
படகில் மிதந்தபடி ஏகாந்தமாய் பயணிப்பதில் கிடைக்கும் ஆனந்தமே தனிதான்.
இயற்கையின் அழகையெல்லாம் கொட்டி வைத்திருக்கும் ஏரியழகின் ரம்மியம்
தனித்துவமானது. கொடைக்கானலின் மையப்பகுதியே இந்த ஏரிதான். இதன் சுற்றுச்
சாலை 5 கி.மீ. ஏரியின் அளவு 24 ஹெக்டேர் மதுரை மாவட்டத்தின் ஆட்சியராகப்
பணியாற்றிய சர் வேரி ஹென்றி லெவிஞ்சி (1819-1885) என்பவர்தான் இந்த ஏரியை
திருத்தி அழகுப்படுத்தினார். அவரது ஆட்சிக் காலத்தில்தான் ஏரியில் மீன்கள்
விடப்பட்டன. முதன் முதலில் 1932 இல்தான் சுற்றுலாப் பயணிகளுக்கான சேவை
தொடங்கியது. இப்போது தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் படகுக்
குழாமும் செயல்படுகிறது.
கரடிச் சோலை அருவி
கரடுமுரடான
மலைப்பாதையில் நடந்து சென்று களைத்துப் போய்விட்டீர்களா? அதோ தெரியுது
பாருங்கள் அதுதான் கரடிச்சோலை அருவி. இங்கு வந்து கரடிகள் நீர்
அருந்தியதால் சோலையுடன் கரடியும ஒட்டிக்கொண்டது. கொடைக்கானல் ஏரியிலிருந்து
2 கி.மீ. தூரமும் பேருந்து நிலையத்திலிருந்து 1.6 கி.மீ தூரத்திலும்
கரடிச் சோலை உள்ளது.
ஃபேரி அருவி
மலையில் அருவி இல்லாமலா!
இந்த அழகுமிகுந்த அருவி பயணிகளுக்கு உவகைதரும் உல்லாச இடம். கொடைக்கானல்
ஏரியிலிருந்து 5 கி.மீ. தொலைவில் இந்த நீரருவி அமைந்துள்ளது.
பம்பர் அருவி
பம்பர்
அருவியிலிருந்து கீழ்ப்பாய்ந்து வரிசையான பாறைகள் வழியே நெளிந்து பொங்கிப்
பெருகும் தண்ணீரின் அழகு வசீகரத்தின் உச்சகட்டம். இந்த அருவிக்கு கிராண்ட்
கேஸ்கட் என்றொரு பெயரும் உண்டு. பம்பர் ஹவுஸ் பின்புற வழியில் தொலைவாக
உள்ள ஒரு செங்குத்துச் சரிவின் வழியாக இந்த அழகிய அருவியை அடையலாம்.
கொடைக்கானலிலிருந்து நீங்கள் 4 கி.மீ. பயணிக்கத் துணிந்தவர் என்றால் பம்பர்
அருவியை அடையலாம்.
வெள்ளியருவி
கொடைக்கானல் ஏரி வழிந்தால்
உருவாகும் அருவி இது. ஆர்வம் உள்ளவர்கள் வெள்ளியருவியில் குளித்து
மகிழலாம். இதைக்காண ஏரியிலிருந்து 8 கி.மீ. செல்ல வேண்டும்.
தலையாறு அருவி
கொடைக்கானலுக்குச்
செல்லும் மலைத்தொடர் சாலையில் 13 ஆவது கி.மீட்டரில் இந்த அருவி பாய்கிறது.
இதற்கு எலிவால் அருவி என்ற பெயரும் உண்டு. இந்தியாவின் உயரமான அருவிகளில்
ஒன்றான இதன் உயரம் 975 அடி. அவ்வளவு உயரத்திலிருந்து நீர் கொட்டும் அழகை
என்னவென்று சொல்வீர்கள்?
No comments:
Post a Comment