விழுப்புரம் மாவட்டத்தின் முக்கிய இடங்கள்
விழுப்புரம் மாவட்டத்தின் முக்கிய இடங்கள்

விழுப்புரம் மாவட்டம் தமிழ்நாட்டின் இரண்டாவது பெரிய மாவட்டமாகும்.
செஞ்சிக் கோட்டை, கல்வராயன் மலை ஆகியவை விழுப்புரத்துக்கு அருகில் உள்ள
சுற்றுலா தளங்களாகும். திருக்கோயிலூர், திருவக்கரை முதலியவை அருகில் உள்ள
புகழ்பெற்ற வணக்கத் தளங்கள் ஆகும். தென்னாற்காடு மாவட்டத்திலிருந்து
பிரிந்த மாவட்டம் விழுப்புரம். மயிலம் முருகன் கோயில், திருநங்கைகள் கூடும்
கூவாகம் கூத்தாண்டவர் கோயில், சிங்கவரம் ஒற்றை கற்கோயில், செஞ்சிக்கோட்டை,
சடையப்ப வள்ளல் பிறந்த திருவெண்ணை நல்லூர், ஆழ்வார்கள் பாடிய உலகளந்த
பெருமாள் கோயில் உள்ள திருக்கோயிலூர், அழகிய மரக்காணம் கடற்கரை, மேல்
மலையனூர் அங்காள பரமேஸ்வரி கோயில் எனப் பார்க்க வேண்டிய சிறப்பிடங்களின்
பட்டியல் நீள்கிறது.
திருக்கோயிலூர்
'அன்பே
தகளியாக;ஆர்வமே நெய்யாக' என்ற பெரியாழ்வாரின் பாடல் பெற்ற தலம்,
திருக்கோயிலூர். முதலாழ்வார் மூவர் உலகளந்த பெருமாளைப் பாடிப்
பரவியுள்ளனர். இங்குப் பெருமாளுடன் புஷ்பவல்லித் தாயாரும் கோயில்
கொண்டுள்ளார். இது தவிர மற்றொரு சுற்றுலாத் தலமும் இருக்கிறது.
பெண்ணையாற்றின் நடுவே உள்ள கபிலர் குன்றில் சங்க இலக்கியக் கவிஞர் கபிலர்
கடைசிக் காலத்தில் தங்கியிருந்ததாகச் சொல்லப்படுகிறது. மாநில தொல்பொருள்
ஆய்வுத் துறையினரின் பாதுகாப்பில் இக்கோயில் இருக்கிறது. கடலூர் - சித்தூர்
பெருவழிச் சாலையில் விழுப்புரத்திலிருந்து 37 கி.மீ. தொலைவில் உலகளந்த
பெருமாள் தரிசனம் கிடைக்கும்.
மேல்மலையனூர்
சிவனுக்கு
பிரம்மஹத்தி தோஷம் நிவர்த்தியான இடம் இது என்று ஒட்டக்கூத்தரின் தக்கயாகப்
பரணி கூறுகிறது. மேல் மலையனூர் சுடுகாட்டில் வீற்றிருக்கும்
அங்காளம்மனிடம் தோஷம் பீடித்த சிவன் பிச்சைக்காரனாகப் பிச்சை பெற்று தோஷம்
நிவர்த்தியானதாகக் கூறப்படுகிறது. இதைக் குறிக்கும் மயானக் கொள்ளைத்
திருவிழா புகழ்பெற்றது. மாசி அமாவாசையில் நடத்தப்படும் இத்திருவிழா, பத்து
நாட்கள் நிகழும். இங்கு அமாவாசை இரவில் தங்கினால் நினைத்தது நிறைவேறும்
என்பது பக்தர்களின் நம்பிக்கை. மேல்மலையனூர் மகா ஏரியிலிருந்து பிறக்கும்
சங்கராபரணி ஆறு, செஞ்சி வழியாகச் சென்று பாண்டிச்சேரி கடலில் கலக்கிறது.
ஏரிக்கரையிலுள்ள துர்க்கை அம்மனும், சர்க்கரை விநாயகர் கோயிலும் பிரசிசத்தி
பெற்றவை.
திருவெண்ணைநல்லூர்
கம்பன்
வீட்டுக் கட்டுத்தறியும் கவிபாடும் என்பார்களே. அந்தக் கம்பனை ஆதரித்துப்
போற்றிய சடையப்ப வள்ளல் பிறந்த ஊர். பழமை வாய்ந்த சிவன் கோயில் ஒன்று
இங்குள்ளது. விழுப்புரத்திலிருந்து 20 கி.மீ. தொலைவில் திருக்கோயிலூர்
சாலையில் அமைந்துள்ளது திருவெண்ணைநல்லூர்.
திருவக்கரை
திருவக்கரை
என்றதும் கல்மரங்கள் ஞாபகத்திற்கு வரும். இங்குள்ள சோழர்கால சிவன் கோயில்
புகழ்பெற்றது. பௌர்ணமி தோறும் ஆயிரக்கணக்கில் பக்தர்கள் கூடும் கோயில்.
இக்கிராமத்தில் புராதன காலத்தின் சாட்சியாகக் கல்மரங்கள் காணக்
கிடைக்கின்றன.
மண்டகப்பட்டு
மக்களை
ஆண்ட மன்னர்களின் கலை ஈடுபாட்டிற்கு அளவேயில்லை. காலத்தால் அழியாத
சிற்பக்கலை உன்னதங்களாகக் காட்சிக்கு கவரி வீசுகின்றன குடைவரைக் கோயில்கள்.
மகேந்திரவர்ம பல்லவன் உருவாக்கிய புகழ்பெற்ற குடைவரைக் கோயில் இங்குள்ளது.
விழுப்புரத்திலிருந்து 20 கி.மீ. தொலைவிலும், செஞ்சியிலிருந்து 17 கி.மீ.
தொலைவிலும் அமைந்துள்ளது. இக்கோயில் தொல்பொருள் துறையினரின் பாதுகாப்பில்
இருக்கிறது.
எண்ணாயிரம்
இந்த
ஊரில் 8000 சமணர்கள் வாழ்ந்துள்ளனர். இதனால் 'எண்ணாயிரம்' என்ற பெயர்
ஊருக்கு வந்திருக்கிறது. மாமன்னன் இராஜராஜ சோழன் கட்டிய நரசிம்மஸ்வாமி
கோயில் இங்குள்ளது. மற்றொரு நரசிம்மப் பெருமாள் கோயிலையும் இங்கே
தரிசிக்கலாம். பெருமாள் பக்தர்கள் பார்க்க வேண்டிய திருத்தலம்.
மயிலம்
ஒரு
சிறிய மலைக்குன்றில் எழுந்தருளி அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி
திருக்கோயில் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். இங்கு நிகழும்
பங்குனி உத்திரத் திருவிழாவைக் காண தமிழகம் முழுவதுமிருந்து பக்தி
சிரத்தையுடன் பக்தர்கள் கூடுவார்கள். விழுப்புரத்திலிருந்து 35 கி.மீ.
தொலைவில் பாண்டிச்சரி - திண்டிவனம் சாலையில் அமைந்துள்ளது மனங்கவர்ந்த
மயிலம்.
மேல்நாரியப்பனூர் தேவாலயம்
புனித
அந்தோணியாரின் சீடரான குஞ்சான் என்பவர் கட்டிய மிகவும் பழமை வாய்ந்த
தேவாலயம் இது. சின்ன சேலத்திலிருந்து 8 கி.மீ. தொலைவில் சென்னை - சேலம்
நெடுஞ்சாலையில் மேல் நாரியப்பனூர் தேவாயலம் பக்தர்களுக்கு அருள்
பாலிக்கிறது.
மேல் சித்தாமூர்
தமிழ்நாட்டில்
வாழ்ந்த திகம்பர சாமிகளின் தலைமையகம். ைகாஞ்சி என்பவர் தலைமைக் குருவாகத்
திகழ்ந்துள்ளார். இங்குள்ள இரண்டு சமணக் கோயில்கள் ஒன்றில் பர்சவானந்தரும்,
மற்றொன்றில் மயிலானந்தரும் வீற்றுள்ளனர். மயிலானந்தர் ஆலயத்தில் உள்ள
பெரிய கற்பாறையில் பஹீபாலி, பர்சவானந்தர், ஆதிநாதர், மஹhவீரர் மற்றும்
அம்பிகா யஷீ ஆகிய சிற்பங்கள் கல்லில் வடிக்கப்பட்டுள்ளன. இந்தச் சமண
ஆலயங்கள் 16ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டவை. இந்த நூற்றாண்டில்
புதுப்பிக்கப்பட்டவை. திண்டிவனத்திலிருந்து 20 கி.மீ. தொலைவில் மேல்
சித்தாமூர் அமைந்துள்ளது.
கூவாகம்
கூத்தாண்டவர்
கோயில். இந்தியா முழுவதும் வாழும் திருநங்கைகள் வழிபடும் கோயில்.
வருடத்திற்கு ஒருநாள் கூடி மகிழும் கோயில். வருடந்தோறும் 15 நாள்
சித்திரைத் திருவிழா மிகவும் புகழ்பெற்றது. அந்த நாட்களில் காட்சி
ஊடகங்களின் கவனமெல்லாம் அங்கே இருக்கும். இத்திருவிழாவிற்குப் பின்னணியில்
மகாபாரதக் கதை அடிப்படையாக இருக்கிறது. தேசமெங்கும் பரவிக் கிடக்கும்
திருநங்கைகள் கூத்தாண்டவர் கோயிலில் கூடி அரவாணை எண்ணி தாலிகட்டிக்
கொள்கிறார்கள். அடுத்த நாளே தாலியறுப்புச் சடங்கையும் நடத்துகிறார்கள்.
இதிகாசம், போர், வன்முறை, நம்பிக்கை துரோகம், திருவுருக்கள் ஆகியவற்றை பகடி
செய்யும் மூன்றாம் பாலினத்தின் சமூக விமர்சனமாகப் பார்க்கிறார்கள் நவீன
சமுகவியலாளர்கள்.
திருநறுங்கொண்டை
சமணம்
செழித்திருந்த ஊர். இந்தச் சின்னஞ்சிறு கிராமத்தில் ஒரு சமண குகையும்,
பர்சவநாதர் மற்றும் சந்திரபிரபா ஆகிய இருவரும் வீற்றிருக்கும் சமண
ஆலயங்களும் உள்ளன. இங்குள்ள குகை ஒரு காலத்தில் வீரசங்கத் துறவிகள் தங்கிய
துறவி மடமாக இருந்தது. இக்கோயிலில் மிகப்பெரிய அளவில் வெண்கலச் சிலைகளின்
தொகுப்பைக் காண முடியும். இங்கே ஜனவரி - பிப்ரவரி மாதங்களில் நிகழும்
ஆண்டுத் திருவிழாவிற்குத் தமிழகம் முழுவதிலுமிருந்து சமணர்கள் கூடுவார்கள்.
உளுந்தூர் பேட்டையிலிருந்து வடமேற்கே 16 கி.மீ. சென்றால், இந்தச் சமண
கிராமத்தை அடையலாம்.
அவலூர்பேட்டை
முருகப்
பெருமான் கோயில் கொண்டுள்ள சிற்றூர். இங்கு நிகழும் பங்குனி உத்திரத்
திருவிழா வெகு விமரிசையானது. மேல்மலையனூரிலிருந்து பத்தாவது கி.மீட்டரில்
அவலூர்பேட்டை அமைந்துள்ளது.
எசலம்
சோழமன்னன்
முதலாம் இராஜேந்திர சோழன் கட்டிய கோயில். இங்கு இராமநாதேஸ்வரர் கோயில்
கொண்டுள்ளார். இம்மாமன்னனைப் பற்றி வடமொழி கிரந்த எழுத்துக்களில்
எழுதப்பட்டு சோழ அரச இலச்சினையும் பொறிக்கப்பட்டுள்ளது.
கமலக்கண்ணியம்மன் கோயில்
இதுவொரு
நாட்டார் கோயில். இங்கு பலிபீடம் ஒன்றும் மற்றும் நாயக்கர் கால சுவர்
ஓவியங்களும் உள்ளன. செஞ்சி ராஜகிரி மலைக்கோட்டை வழியில் இந்த சின்னஞ்சிறு
கோயில் உள்ளது.
பச்சையம்மன் கோயில்
நீங்கள்
நிற்கும் இந்தக் கோயில், சித்தர்கள் வழிபட்ட திருக்கோயில். இதன்
பின்புறமுள்ள பச்சை மலை 7 ஜடாமுனிகளின் உருவங்களைப் போலக்
காட்சியளிக்கிறது. கொல்லிமலையில்கூட கிடைக்காத அரிய மூலிகைகள் இங்குண்டு.
இம்மலையின் உச்சியில் விக்கிரகங்களே இல்லாத விந்தைக் கோயில் ஒன்றுள்ளது.
குளங்கள் (செஞ்சிக் கோட்டை)
அனுமன்
கோயிலுக்குச் செல்லும் வழியில் கீழ்க்கோட்டைக்கு வெளியே உள்ள கோயில்
குளங்களும், கண்ணைக் கவரும் அழகிய வடிவங்களும் உள்ளன. இவற்றில் சக்கரகுளம்,
செட்டிகுளம் ஆகிய இரு குளங்களும் புகழ்பெற்றவை. பதினெட்டாம் நூற்றாண்டின்
இறுதியில் மராட்டியர்கள் ஆதிக்கம் செலுத்திய காலகட்டத்தில் இக்குளம்
வெட்டப்பட்டுள்ளது. இக்குளத்தின் வடபுறம் உள்ள சிதைச் சதுக்கம்
ராஜாதேசிங்கினுடையது என்று நம்பப்படுகிறது.
மரக்காணம் கடற்கரை
உப்பு
விளையும் பூமி உப்பிட்ட ஊரை உள்ளளவும் நினைக்க வேண்டும். புதுவையிலிருந்து
22 கி.மீ. தொலைவில், வானூர் வட்டத்தில் கிழக்குக் கடற்கரை சாலையில்
அமைந்துள்ளது. மரக்காணம் கடற்கரையும், மீனவர் குடியிருப்பும் கொள்ளை அழகு.
சிங்கவரம்
குடைவரைக்
கோயில், மாவீரன் ராஜாதேசிங்கு வழிபட்ட ரெங்கநாதர் இக்குன்றின் உச்சியில்
கோயில் கொண்டுள்ளார். குடைவரைக்கோயில் தனிச்சிறப்பான தென்னிந்தியக் கோயில்
கட்டடக் கலைப்பாணியில் கட்டப்பட்டுள்ளது. ஸ்ரீரங்கம் ரெங்கநாதரைவிட, இந்த
ரெங்கநாதர் நீளமானவர் என்று கதப்படுகிறது. சிங்கவரம் ரெங்கநாதர் 24 அடி
நீளத்திற்கு பள்ளி கொண்டுள்ளார். அவரும், பள்ளியறையும் ஒரே கல்லில்
உருவானவை. மகேந்திரவர்ம பல்லவனின் கலை ஆர்வத்தில் விளைந்த அற்புதம் இது.
தளவானூர்: - சத்ரு மல்லேஸ்வரம்
தளவானூர்
குடைவரைக் கோயிலும் மகேந்திர வர்மன் கல்லில் உருவாக்கிய அதிசயம் தான்.
இந்தக் கோயிலில் சிற்பங்கள் மற்றும் தமிழிலும் சமஸ்கிருதத்திலும்
செதுக்கப்பட்ட கல்வெட்டுக்கள் உள்ளன. பார்த்துப் பரவசம் கொள்ள வேண்டிய கலை
செழித்த கற்கோயில் இது.
திருநாதர் குன்று
இரண்டு
சமணக் குகைகள் பெரிய கற்பாளம். அதில் ஒரு சேர செதுக்கப்பட்டுள்ள 24
தீர்த்தங்கரர்களின் திருவுருக்களும் கி.பி. 9 ஆம் நூற்றாண்டு பாணியில்
அமைந்துள்ளன. ஒற்றை இணைப்பாகத்தில் உள்ள 24 தீர்த்தங்கரர்களையும் இங்கு
மட்டும் காண முடியும். இதனருகே கிடக்கும் பாறையில்தான் சமணத் துறவி
சந்திரநந்தியார் 57 நாட்கள் உண்ணாநோன்பு இருந்து உயிர் நீத்துள்ளதாகச்
சொல்லப்படுகிறது. செஞ்சி நகரிலிருந்து 2 கி.மீ. பயணித்தால் மேற்குப்
பக்கத்தில் தெரியுது பாருங்கள். அதுதான் திருநாதர் குன்று.
திருவாமாத்தூர்
அபிராமேஸ்வரர்
வீற்றிருக்கும் சோழர் காலத்து பழமையான கோயில் இங்குள்ளது. 1500 ஆண்டுகால
பழமை. இந்தக் கோயில் இராஜராஜ சோழன் மற்றும் சீரங்கதேவ மஹhராயர் ஆகிய
இருவருக்கும் இடைப்பட்ட காலத்தில் பல கைகள் மாறியுள்ளதாகக் தெரிகிறது.
பழமையின் வேர்களோடிய இக்கோயில், அம்மன் முத்தாம்பிகை.
தும்பூர்
நாகம்மன் கோயில் கொண்டுள்ள சிற்றூர் தும்பூர். இதுவொரு பழமையான கோயில். 1450 ஆண்டு புராதனமானது.
செஞ்சிக் கோட்டை
சப்த
கன்னிகளில் ஒன்றாக திகழும் செஞ்சியம்மனின் பெயரால் விளங்கும் இக்கோட்டை
சுமார் 700 ஆண்டுகள் பழமையானது. இக்கோட்டை ஆனந்தக் கோனாரால் அமைக்கப்பட்டு
பல அரசர்களின் ஆட்சியின் கீழ் இருந்து பின்னர் பிரெஞ்சுக்காரர்கள் மற்றும்
ஆங்கிலேயர்கள் வசம் இருந்தது. தற்போது இக்கோட்டை மத்திய அரசின் தொல்பொருள்
ஆய்வுத் துறையின் பராமரிப்பில் உள்ளது. கிருஷ்ணகிரி, சந்திரகிரி மற்றும்
ராஜகிரி ஆகிய மூன்று சீரற்ற மலைக்குன்றுகளை மாபெரும் செஞ்சிக்கோட்டையின்
மதில்கள் அரவணைத்துக் செல்கின்றன.ராஜகிரி மலை மட்டுமே (800 அடி உயரம்)
தனியாக எவற்றோடும் பொருந்தாமல் நிற்கும் குன்று. தற்போது கட்டப்பட்ட ஒரு
பாலம் 20 மீ வரை ஆழமுள்ள சுனையை இணைக்கிறது.
போர்வீரர் தங்குமிடங்கள் குதிரைலாயங்கள்
நிகழ்காலத்தில்தான்
நாம் இருக்கிறோமா? என்று வியந்து போவீர்கள். உயரம் குறைந்த கவிகை
மாடங்கள். வளைவு வளைவான நுழைவாயில்கள், தனியறைகள், குதிரைகள்இளைப்பாறவும்
போர்வீரர்கள் தங்கவும் கட்டப்பட்டுள்ளன. கல்யாண மகாலுக்கு அருகிலுள்ள இந்த
கவின்மிகு அறைகளில் தொல்பொருள் ஆய்வுத்துறையின் பயிற்சி முகாம்
அமைக்ப்பட்டுள்ளது.
ஆனைக்குளம்
போர்
வீரர் குடியிருப்பு வரிசைக்கு தெற்கில் உள்ள யானைக்குளம் மாடங்கள் அழகின்
ரகசியங்கள் செஞ்சிக் கோட்டைக்குப் போய் யானைக் குளம் பார்க்காமல் திரும்பி
விடாதீர்கள்.
சதத் உல்லாக்கான் மசூதி
சதத்
உல்லாக்கான் எழுப்பிய மசூதி. தேசிங்குராஜனை போரில் வென்று கோட்டையைக்
கைப்பற்றியதன் நினைவாக கட்டப்பட்டது. கி.பி. 1717 - 18 இல்
எழுப்பப்பட்டதாகப் பார்சிய கல்வெட்டு தெரிவிக்கிறது.
நெற்களஞ்சியம் - உடற்பயிற்சிக்கூடம்
விஜய
நகர கட்டடக் கலை பாணியில் அமைந்த செஞ்சிக் கோட்டையின் பெருமைமிகு
கட்டடங்கள் ராஜகிரி மலையின் கீழ் கல்யாண மகாலுக்கு அருகிலுள்ள
நெற்களஞ்சியம் பிரமாண்டமானது. தாராளமான நுழைவாயிற் பகுதி. இதன் சுவர்கள்
மூன்று மீட்டர். பீப்பாய் போன்ற அரைவட்ட கவிகை மாடத்தை நெற்களஞ்சியத்தின்
வடகிழக்கில் காணமுடியும். உடற்பயிற்சி செய்யவும் நெற்களஞ்சியக் கட்டடம்
பயன்பட்டதாகச் சொல்லப்படுகிறது.
வெங்கட்ரமணா கோயில்
பரந்து
விரிந்துள்ள கோயில், இங்குள்ள முனைப்பான தூண்களும், அழகுமிகு சிற்பங்களும்
நாயக்கர்களின் அழகியல் தன்மையை எடுத்துக்காட்டுகின்றன. அந்தக் கோயிலில்
நின்று பார்க்கும்போது, அழகின் மகத்துவம் உங்களுக்குப் புரியும்.
வேணு கோபாலஸ்வாமி கோயில்
கலை
எழில் மிகுந்த சிற்பங்கள் நிறைந்த கோயில் இது. கிருஷ்ணன் புல்லாங்குழல்
இசைப்பது, அவரை கயிறு கட்டி இழுப்பது போன்ற சிற்பங்கள் இங்குள்ளன. இந்தக்
கோயிலின் முகப்பு வாயிலில் மிகச்சிறந்த பூச்சு வேலையோடு மெருகேற்றப்பட்ட
மென்மையான தளம் உள்ளது. இது வேணுகோபாலஸ்வாமி கோயிலின் சிறப்புத் தன்மையை
பறைசாற்றுகிறது.
ராஜகிரி மலைகோட்டை
இந்தோ
- இஸ்லாமிய பாணியில் கட்டப்பட்ட அரச தர்பார் மண்டபம் இம்மலையின் உச்சியில்
உள்ளது. மேல் வளைவுகள் வரிசையாக அமைய, குவிமாடம் மூடிய கூரை என்று
இம்மண்டபத்தின் வடிவமைப்பு நம்மை அசத்திவிடும். ரசிக்கத்தக்க மற்றொரு
கட்டடம் போர்த் தளவாடக் கிடங்கு, இம்மலை மீது நாயக்கர் கால கட்டடக்
கலையமைப்பைக் கொண்ட ரெங்கநாதர் கோயில் ஒன்றும் இருக்கிறது. இங்கு சென்றால் 4
மீட்டர் நீளமும் 2 மீட்டர் சுற்றளவும் கொண்ட பெரிய இரும்பு பீரங்கி
ஒன்றையும் பார்த்து வரலாம்.
கிருஷ்ணகிரி கோட்டை
ராஜகிரியின்
வடக்கேயுள்ள மலைக்குன்றில் கருங்கல் பாறைகளின் மீது அமைந்துள்ள
கிருஷ்ணகிரி கோட்டை.. கற்படிகள் வழியாக நடந்து கோட்டையை அடையலாம். இங்கு
காண்பதற்கு நிறைய இடங்கள் உள்ளன. இரு பிரமாண்டமான தானியக் களஞ்சியக்
கட்டடங்கள், தூண்களில் உருவான மண்டபம், இரண்டு கோயில்கள், செங்கல் மாளிகை,
வட்டமான பார்வையாளர் தர்பார் மற்றும் சிறு பீரங்கியும் உள்ளன. நீங்கள்
சுற்றி முடிப்பதற்குள் அசந்து போய்விடக் கூடும்.
No comments:
Post a Comment